தமிழகம்

நீதிமன்றத் தடையைக் கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுக: முத்தரசன்

செய்திப்பிரிவு

நீதிமன்றத் தடையைக் கருத்தில் கொண்டு 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதன் மூலம் அமைதிக்கு வழி ஏற்படுத்த முடியும். குழு அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“மத்திய அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச்சட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மீது தீர்வு காண ஒரு குழு அமைப்பதாகவும், அது நீதிமன்றத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என தெளிவுபடுத்தி, அந்தக் குழுவிற்கான உறுப்பினர்கள் பெயரைத் தருமாறும் மத்திய அரசிடம் கோரியுள்ளது.

மத்திய அரசு, நீதிமன்றம் அமைக்கும் குழுவை ஆயுதமாகப் பயன்படுத்தி, விவசாயிகளை வஞ்சிக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க இயலாது. விவசாயிகள் விரோதச் சட்டங்களை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்ற விவசாயிகள் தரப்பு நிலையைக் கருத்தில் கொண்டு குழு அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT