கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச் சாலையில் இன்று ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து விருத்தாசலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச் சாலையில், வேப்பூர் மார்க்கத்திலிருந்து கார் ஒன்று கடலூர் நோக்கி இன்று பயணித்தது. கார் விருத்தாசலம் புறவழிச் சாலையில் உள்ள மணவாளநால்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரெனத் தீப்பற்றியது.
அப்போது காரை ஓட்டி வந்தவர் தீப்பற்றியதை அறிந்து சாலையோரம் வண்டியை நிறுத்த முயன்றதாகவும், கார் கதவுகள் திறக்கப்படாததால், கண்ணாடியை உடைத்து வெளியேற முயற்சித்ததாகவும், ஆனால் அது முடியாமல் போகவே காரினுள்ளேயே கருகி உயிரிழந்ததாகவும் விபத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.
மேலும் அருகில் சென்று காப்பற்றலாம் என எண்ணினாலும், கார் வெடித்துச் சிதறினால் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்ததாகவும், பின்னர் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்ததன் பேரில், அவர்கள் வந்து தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது. காரினுள் பயணித்தவர் குறித்தும், விபத்து குறித்தும் விருத்தாசலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்