கோவையில் இருந்து ராஜ்கோட்டுக்குச் சரக்கு ரயில் சேவையைத் தொடங்கி வைத்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் | படம்: ஜெ.மனோகரன்.   
தமிழகம்

கோவை- ராஜ்கோட் இடையே சரக்கு ரயில் சேவை தொடக்கம்

த.சத்தியசீலன்

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்கு சரக்கு ரயில் சேவை நேற்று (ஜன.8) இரவு தொடங்கப்பட்டது.

வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் கலந்துகொண்டு சரக்கு ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் கோட்ட வணிக முதுநிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, '’சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் 2-வது சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சென்றடையும்.

இந்த சரக்கு ரயில் வஞ்சிபாளையம் (திருப்பூர்), ஆங்கூர் (ஈரோடு), உத்னா (சூரத்), பருச் சந்திப்பு (அங்கலேஸ்வர்), கங்காரியா (ஆமதாபாத்) ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதேபோல் மறுமார்க்கமாக வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ராஜ்கோட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும்.

இந்த சரக்கு ரயில் வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தை வந்தடையும். கரோனா அச்சம் காரணமாகப் பணியாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சரக்குகளை ரயிலில் ஏற்றி, இறக்குவார்கள்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT