தமிழகம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா  காற்றாலைகளில் முதலீடு: குமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை 

எல்.மோகன்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா முதலீடு செய்திருப்பது குறித்து குமரியில் உள்ள காற்றாலைகளில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அரபு நாட்டில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் கேரள ஐக்கிய அரபு தூதரக பெண் அதிகாரி ஸ்வப்னாவிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்வப்னாவிற்கு உதவியதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில் தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை பல தொழில்களில் முதலீடு செய்திருப்பதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை திட்டங்களில் பெரும் தொகையை முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதில் ஸ்வப்னா குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாலைகள் பலவற்றில் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கேரளாவில் இருந்து இன்று 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் குமரி வந்தனர். ஆரல்வாய்மொழிக்கு சென்ற அவர்கள் ஸ்வப்னா முதலீடு செய்திருப்பதாக கூறப்படும் காற்றாலைகளில் ஆய்வு செய்தனர்.

மேலும் ஸ்வப்னாவுடன் சேர்ந்து பண முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரித்தனர். 4 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரிப்பது தெரியவந்துள்ளது. ஆரல்வாய்மொழி காற்றாலைகளில் இன்று

என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT