விவசாயிகள் போராட்டம் 
தமிழகம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

ஜெ.ஞானசேகர்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி வானொலி நிலையம் முன் விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜன. 06) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தல், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு தமிழ்நாட்டில் விவசாயிகளிடத்தில் எதிர்ப்பு இல்லை என்று தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருபவர்களைக் கண்டித்தும், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 50-க்கும் அதிகமானோர் அதன் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் குறித்து பி.அய்யாக்கண்ணு கூறும்போது, "வேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் விவசாயிகள் எதிர்க்கவில்லை என்று விவசாய சங்கத்தினர் சிலர் தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக என் மீது இதுவரை 22 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். எனவே, தவறான தகவல்களை கூறி வருவதைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இங்கு போராடக் கூடாது எனில் நாங்கள் டெல்லிக்குச் செல்வதை போலீஸார் தடுக்கக் கூடாது" என்றார்.

SCROLL FOR NEXT