தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மாணவர் அணிச்செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அதிமுக பொள்ளாச்சி மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபரீஷ், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் புகார் தெரிவித்த பூபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார், நாகராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பும், எதிர்ப்பும், கண்டனமும் எழுந்தன. மாணவர்களும் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

அதையடுத்து இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றியது தமிழக அரசு. அவர்கள் ஐவரும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். கோவை, பொள்ளாச்சியில் கடந்த நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரை கடந்த 2019-ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் முதலில் கைது செய்தனர்.

மேற்கண்ட இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே வழக்கின் தன்மை கருதி, மேற்கண்ட இரண்டு வழக்குகளும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ புலனாய்வு அமைப்பினர் புதியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து சிபிஐ ஐஜி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேற்கண்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தாங்கள் பதிவு செய்த வழக்கு தொடர்பாக மீண்டும் அப்போது கைது செய்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட பாலியல் வழக்கு தொடர்பாக, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகேயுள்ள சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பொள்ளாச்சி வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற 'பைக்' பாபு (27), பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளதோடு, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். 'பைக்' பாபு இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

பொள்ளாச்சி நகர் அதிமுக மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கு கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்துக்கொண்டதாலும்,கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும், கட்சியின் பொள்ளாச்சி நகர் மாணவரணி செயலாளர் கே.அருளானந்தம் இன்றுமுதல் கட்சிய்டின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT