நாகப்பட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டை திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன் (28), இனியவன் (23), வினோத் (23), சிவா (45), நவீன் (22), சுந்தரமூர்த்தி (35), பார்த்திபன் (23) ஆகிய 7 பேரும் அதே ஊரைச் சேர்ந்த ஏலாச்சி பிச்சைவரதன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜூன் 17ம் தேதி காலையில் மீன்பிடிப்பதற் காக கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக் கில் வியாழக்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, அங்குவந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி படகுடன் இலங்கை கரையை நோக்கி அழைத்துச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இதை ஊர் மக்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊர் நாட்டார்கள் மாநில மீன்வளத் துறை அமைச்சர், நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.