செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாகவும், இது குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சென்னைக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனை இருப்பதால் விபத்துகளில் சிக்குபவர்கள் அங்குதான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஆனாலும் அங்கு தற்போது முழுநேர மருத்துவ தலைமை அதிகாரி இல்லை.
தலைக்காயம் உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சைகளுக்கு அவசியமான நரம்பியல் துறை இங்கு இல்லை. அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான அளவில் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 26-ம் தேதி செங்கல்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர் செயல்படாததால் இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இது குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.