வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டியக்க அணி தேர்தல் வரும் வரைகூட நீடிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி செல்வதற்காக நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இருந்து காந்திய மக்கள் இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை வெளியேறிவிட்டன. இருக்கும் நான்கு கட்சிகளும் எப்போது விலகுவார்கள் என்பது தெரியாது. தேர்தல் வரும் வரை கூட இந்த அணி நீடிக்காது. மக்கள் நலக் கூட்டியக்கத்தால் எந்த மாற் றத்தையும் ஏற்படுத்த முடியாது.
அன்புமணியை முதல்வர் வேட் பாளராக ஏற்றால் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள் ளார். தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு, அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு எதிராக வலு வான கூட்டணி அமைக்க தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் முன்வர வேண்டும்.
இந்திர தனுஷ் நோய் தடுப்பு மருந்து திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். ஆனால், தமிழகத்தில் வெளியான விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டம்போல விளம்பரப்படுத்துவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.