புதுச்சேரியில் இன்று புதிதாக 26 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. பரிசோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4.82 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.30) கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,346 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-16, காரைக்கால்-9, மாஹே-1 என மொத்தம் 26 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
இன்றைக்கு உயிரிழப்பு இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 633 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் இருந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 200 பேரும் என மொத்தம் 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 100 (97.39 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரத்து 987 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பரிசோதனை எண்ணிக்கை 4.82 லட்சத்தை எட்டியுள்ளது. இதில், 4 லட்சத்து 39 ஆயிரத்து 497 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.