திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
திண்டுக்கல் மலைக்கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்பு பெற்ற மலைக்கோட்டையை சுற்றுலாபயணிகள் நாள்தோறும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலைக்கோட்டையில் உள்ள 'கோயிலுக்கு வழிபடச் செல்லும் போராட்டம்', 'தீபம் ஏற்றச்2 செல்லும் போராட்டம்' என அவ்வப்போது இந்து அமைப்புக்களால் அறிவிக்கப்படுவதும் அந்தநேரங்களில் அவர்களைத் தடுக்க போலீஸார் மலைக்கோட்டைp பகுதியை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்ல சில அமைப்புக்கள் முடிவு செய்து அறிவிப்புக்கள் வெளியிட்டன.
இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளும் மலைக்கோட்டை செல்ல உரிமை கோரின. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மலைக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள், மலைக்கோட்டையின் மேல்பகுதிகளில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீஸார் இரவு வரை ரோந்துபணியில் ஈடுபட்டனர். தடை உத்தரவு காரணமாக மலைக்கோட்டையை காண நேற்று சுற்றுலாபயணிகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.