தமிழகம்

புதிய மாவட்டங்களில் அரசுத் துறைக்கான பணியிட ஒதுக்கீட்டில் தாமதம்?- பதவி உயர்வுக்குக் காத்திருப்போர் கவலை  

என்.சன்னாசி

தமிழகத்தில் நிர்வாக வசதிக்கென ஏற்கெனவே 5 புதிய மாவட்டங்கள் உதயமான நிலையில், 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாக இருந்த முந்தைய மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்டாலும், புதிய மாவட்டங்களில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மட்டுமே அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும், குறிப்பாகக் காவல்துறையில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் பிற அரசுத் துறைகளிலும் கீழ் நிலையிலுள்ள சில காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு நிலவுகிறது. ஒரே அலுவலர் இரு மாவட்டங்களைக் கவனிக்கும் நிலையும் உள்ளது.

கடந்த சட்டபேரவைக் கூட்டத்தில் காவல்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, ‘புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும், புதிய மாவட்டங்களில் காவல்துறையில் புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் அறிவித்தார்.

இதன்படி, மதுரை நகரில் கோச்சடை, அனுப்பானடி, விழுப்புரத்தில் மேல்மலையனூர், திருவாரூரில் அம்மையப்பன், திருமபுரியில் காரிமங்கலம், மாட்லம்பட்டி, கள்ளக்குறிச்சியில் களமருதூர், திருவெண்ணைநல்லூர், வானகரம், திருமுடிவாக்கம், அரசூரல், பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையம், கரூரில் தாந்தோணி ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மதுரை, பிற இடங்களிலுள்ள 10 புறக்காவல் நிலையங்கள் முழுநேரக் காவல் நிலையமாக்கப்படும் எனக் கூறப்பட்டது.

தரம் உயர்வு

இதன்படி, மதுரை மாவட்டத்தில் பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, சாப் டூர், கீழவளவு, காடுபட்டி, அப்பன் திருப்தி, மேலவளவு ஆகிய 7 காவல் நிலையங்கள் சார்பு ஆய்வாளர் நிலையில் இருந்து ஆய்வாளர் நிலைக்குத் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அதே நிலையே நீடிக்கிறது என மதுரை காவல்துறை தெரிவிக்கிறது.

திண்டுக்கல் உட்பட 6 மாநகராட்சிகளில் காவல் ஆய்வாளர், சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவுப் பணியிடங்கள் 53 என மொத்தம் 84 பணியிடங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு புதிய மாவட்டத்திலும் மாவட்டத் தனிப்பிரிவுக் காவல் ஆய்வாளர், குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர், க்யூ பிரிவு ஆய்வாளர், மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர், மாவட்ட குற்றப் பதிவேடு ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர், மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர், நில அபகரிப்புப் பிரிவு ஆய்வாளர், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மற்றும் சிபிசிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர்கள் என 15 ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கை இல்லை.

பொதுமக்களின் நலன் கருதி, நிர்வாகம் தொய்வின்றி நடக்க, புதிய மாவட்டங்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே காவல், பிற அரசுத் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்துப் பதவி உயர்வுக்குக் காத்திருப்போர் கூறுகையில், ''தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட6 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியில் உயர் அதிகாரிகள் நிலை (ஆட்சியர், எஸ்.பி. ) தவிர, பிற துறைகளில் போதிய ஆட்களை நியமிக்கவில்லை. சட்டம், ஒழுங்கு பராமரித்தல், 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டத்திற்கான நியமன ஒதுக்கீடுகளை நிரப்ப வேண்டும். இதன் மூலம் பதவி உயர்வுக்காகக் காத்திருப்போர் பயன்பெறுவர்'' என்றனர்.

காலி இடங்கள் குறித்து உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''புதிய மாவட்டத்திற்கு நியமனம் படிப்படியாக நடக்கிறது'' என்றார்.

SCROLL FOR NEXT