தமிழகம்

அன்பு அக்கா டி.யசோதா மறைவு கேட்டு அதிர்ச்சியுற்றேன்: ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.யோசாதா காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பு அக்காவாகத் திகழ்ந்தவர், குடும்பத்தில் ஒருவராகப் பழகியவர் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், என் அன்பிற்குரிய அக்காவுமான டி.யசோதா உடல்நலக் குறைவு காரணமாக திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 1980-ல் சட்டப்பேரவை உறுப்பினராகி, 1984, 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவரது குரல் நாட்டுப் பிரச்சினைகளில் - மாநிலப் பிரச்சினைகளில் - தொகுதிப் பிரச்சினைகளில் முன்னணி வகித்த - சட்டப்பேரவையின் முக்கியக் குரலாகத் திகழ்ந்தது.

தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர் - எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல் பழகியவர்; பாசம் காட்டியவர். அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைச் சட்டப்பேரவையில் எதிரொலித்தவர்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் - ஆளும் கூட்டணி வரிசையில் இருந்தாலும் யசோதா அக்காவுக்குத் தொகுதி மக்கள்தான் பிரதானம். அதைத்தாண்டி எதையும் சிந்திக்காதவர். அம்மக்களுக்காக உழைப்பதுதான் தனது வாழ்நாள் பணி என்பதில் இறுதி மூச்சுவரை உறுதியாக இருந்தவர். 2006-ல் முதல்வர் கருணாநிதியிடமும், துணை முதல்வராக இருந்த என்னிடமும் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை, போராடியல்ல- எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் உரிமையுடன் பெற்று நிறைவேற்றியவர்.

சட்டப்பேரவையில் இருந்த பெண் உறுப்பினர்களில் - சாதனை வீராங்கனையாகத் திகழ்ந்த எனது பாசத்திற்குரிய அக்கா நம்மிடம் இன்று இல்லை என்பதை என் மனம் நினைத்துப் பார்க்கவே பதறுகிறது. டி.யசோதாவின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல - அடித்தட்டு மக்களின் விழிப்புணர்வுக்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்டவர் என்ற முறையில் திராவிடப் பேரியக்கத்திற்கும் இழப்பு.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் இயக்கத்திற்கும் - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT