திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனைச் சான்றிதழ் கேட்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆகவே, உடல் வெப்பப் பரிசோதனை நடத்தி அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சனிப்பெயர்ச்சியை ஒட்டி டிசம்பர் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக் கோரி கோயிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவரான எஸ்.பி.எஸ்.நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோயில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி தினமான 27ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாகவும், நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சனிப்பெயர்ச்சி தினத்தைத் தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அன்னதானம் கோயிலுக்கு வெளியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தனி மனித விலகலைப் பின்பற்றும் வகையில், பக்தர்களின் வசதிக்காக மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசை அமைக்கப்பட்டுள்ளதாகவும், நுழைவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பக்தர்களைக் கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், பக்தர்களின் மத உணர்வு, வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது. இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதிச் சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், சனிப்பெயர்ச்சி விழா நடத்துவது தொடர்பாகத் துணைநிலை ஆளுநர், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், மனுதாரர் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனைச் சான்றிதழை பக்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து காரைக்காலைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்றும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய விதிப்படி வெப்பநிலை பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற முடிவு பண விரயம் மற்றும் சாத்தியமற்றது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்து கரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.