பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

மானாமதுரை அருகே அமைச்சர், ஆட்சியரை வழிமறித்து வாக்குவாதம் செய்த திமுக ஒன்றியக் குழுத் தலைவர், கவுன்சிலர்கள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லாததால் அமைச்சர், மாவட்ட ஆட்சியரை வழிமறித்து, திமுக ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் சுகாதாரத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று (டிச. 20) நடைபெற்றது. கிளினிக்கை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால், இந்த விழாவுக்கு மானாமதுரை திமுக ஒன்றியக் குழுத் தலைவர் லதா அண்ணாதுரையை அதிகாரிகள் அழைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஒன்றியக் குழுத் தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் திமுக கவுன்சிலர்கள் விழா முடிந்ததும் புறப்படச் சென்ற அமைச்சரை வழிமறித்தனர்.

தொடர்ந்து அவர்கள், "இது அரசு விழாவா, இல்லை கட்சி விழாவா?" என்று கேட்டனர். இதைக் கண்டுகொள்ளாமல் அமைச்சர் காரில் ஏறிச் சென்றார். அவருக்குப் பிறகு வந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனையும் மறித்துக் கேட்டனர்.

அவரும், "அலுவலகத்திற்கு வாருங்கள், பேசிக்கொள்வோம்" என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

இதையடுத்து, பதில் சொல்லாமல் சென்ற ஆட்சியரைக் கண்டித்து திமுகவினர் கோஷமிட்டனர். இது குறித்து ஒன்றியக் குழுத் தலைவர் லதா அண்ணாதுரை கூறும்போது, "நான் மானாமதுரை ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தும் என்னை எந்த விழாவுக்கும் அழைப்பதில்லை. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது கண்டுகொள்ளாமல் செல்கிறார்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT