புதுச்சேரியில் குரூப் ஏ, பி அரசு அதிகாரிகள் 2,506 பேர் கடந்த ஆண்டு சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்யாதது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனைவரும் 2020ஆம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய அரசு சார்பு செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வது அவசியம். முக்கியமாக, பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகளுக்கு ஆண்டுதோறும் அதிகாரிகளால் சொத்துகளை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முக்கியமாக ஊழலைத் தடுப்பதும், அரசு ஊழியர்களின் சொத்துகளைக் கண்காணிப்பதும், அவர்களின் சொத்துகளை அவர்கள் அறிந்த வருமான ஆதாரத்திற்கு ஏற்றவாறு அடையாளம் காண்பதற்கும் உதவும். ஆனால், அந்நடைமுறை புதுச்சேரியில் இதுவரை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை.
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் அசையும், அசையாத சொத்துகளை எவ்வளவு பேர் தாக்கல் செய்துள்ளனர் என்று தகவல் அரியும் உரிமைச் சட்டத்தில் சவுரவ் தாஸ் சில மாதங்கள் முன்பு தகவல்கள் கோரியிருந்தார். அதில், மொத்தமுள்ள 10 ஆயிரத்து 949 குரூப் ஏ, பி அதிகாரிகளில் 2019-ல் 2,506 பேர் தங்கள் அசையும், அசையாத சொத்து விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு ஆணையம், அதிகாரிகள் சொத்து விவரங்களை டிஜிட்டல் மயமாக்க உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு சொத்து விவரங்கள் தராதவர் பட்டியலில் பல அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள், பல்வேறு துறை இயக்குநர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள, எஸ்.பி.க்கள், ஆய்வாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், அனைத்து அதிகாரிகளும் ஜனவரியில் தங்கள் சொத்து விவரங்களை ஆன்லைனில் ஆண்டுதோறும் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். அதை தலைமை விஜிலென்ஸ் அலுவலகம் கண்காணிக்க அறிவுறுத்தியிருந்தார்.
பொதுத் தகவல் அதிகாரியும், விஜிலென்ஸ் சார்புச் செயலாளருமான கண்ணன், அரசுத் துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
"புதுச்சேரியில் உள்ள ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் https://esalary.py.gov.in/ipr என்ற இணையதள முகவரிக்கு தங்களுடைய 2020-ம் ஆண்டின், அசையும், அசையா சொத்துகள் குறித்த விவரங்களைக் குறிப்பிட வேண்டும். தவறினால் பதவி உயர்வு, இடமாற்றம், ஓய்வூதியச் சலுகை, விஜிலென்ஸ் ஒப்புதல் ஆகியவை மறுக்கப்படும். மேலும், துறை ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்".
இவ்வாறு கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகளின் சொத்து விவரங்களை முறையாகப் பதிவு செய்ய வழிமுறை இல்லை. தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு மூலம் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.