உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜனவரி 4 முதல் 3 மாதங்களுக்கு 3 அமர்வுகள் செயல்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாறுதல் செய்யப்படுவது வழக்கம். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்போது பணிபுரிந்து வரும் நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் ஜன. 3-ம் தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து ஜன. 4 முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மற்றும் அவர்கள் விசாரிக்குவுள்ள வழக்குகளின் வகைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்றக் கிளையில் 3 அமர்வுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பொதுநல மனுக்கள், 2018 ஆண்டு முதல் தாக்கலான ரிட் மேல்முறையீடு மனுக்கள், குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வு 2017-ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் மேல்முறையீடு மனுக்கள், நீதிபதிகள் டி.ராஜா, ஜி.இளங்கோவன் ஆகியோர் கொண்ட 3வது அமர்வு ஆள்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும்.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, கல்வி, நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம், 2018 முதல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482, 407-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் வழக்குகளையும், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், 2015 ஆண்டு முதல் தாக்கலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 2014 வரையிலான உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஜெ.நிஷாபானு, 2019 முதலான உரிமையியல் மேல்முறையீடு, உரிமையில் சீராய்வு மனுக்கள், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 2018 முதலான தொழிலாளர், அரசுப் பணி ரிட் மனுக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள். நீதிபதி என்.சதீஷ்குமார், 2014 வரையிலான முதலாவது, இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மோட்டார் வாகன சட்டம், வரி, ஏற்றுமதி இறக்குமதி, மதுவிலக்கு, கனிமங்கள், வனம், தொழில்துறை சார்ந்த ரிட் மனுக்களை விசாரிக்கின்றனர்.
நீதிபதி எம்.தண்டபாணி, 2017 வரையிலான தொழிலாளர், அரசுப்பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.தாரணி, 2018 முதலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள் மற்றும் சீராய்வு மனுக்கள், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி, 2018 வரையிலான உரிமையில் மேல்முறையீடு மனுக்கள், 2015 முதல் 2018 வரையிலான குற்றவியல் சீராய்வு மனுக்களை விசாரிக்கின்றனர்.
நீதிபதி எம்.நிர்மல்குமார், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள், நீதிபதி கே.முரளிசங்கர், 2017 வரையிலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் மேல்முறையீடு, சிபிஐ, ஊழல் வழக்குகளை விசாரிக்கின்றனர்.