தமிழகம்

கோட்டூர்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு: பிரபல பைக் கொள்ளை ஆசாமி கைது

செய்திப்பிரிவு

தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் வைத்திருந்த ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் திருடு போனது. இது தொடர்பாக 2 பேரை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர். மற்றொரு சம்பவத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடும் பிரபல கொள்ளை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் லட்சுமி (61). இவரது கணவர் சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பணம் திருடு போகும் முன்னர் வீட்டில் உள்ள கபோர்டை ஆட்களை கூட்டி வந்து லட்சுமி சரி செய்துள்ளார். எனவே, அந்த பணியில் ஈடுபட்டவர்கள் கைவரிசை காட்டினார்களா என்ற கோணத்தில் இருவரை அழைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பைக் திருடியவர் கைது

சென்னை ராமாபுரம் சாந்தி நகர் கன்னியப்பன் தெருவைச் சேர்ந்தவர் நிதின் சிவகுமார். தனியார் நிறுவன ஊழியரான இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் கடந்த 29-ம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து ராயலா நகர் போலீஸார் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு வாகன திருட்டில் ஈடுபட்டதாக அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற கொக்கி குமாரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

          
SCROLL FOR NEXT