தமிழகம்

சசிகலா குறித்து தலைமை முடிவு செய்யும்: அமைச்சர் ஜி.பாஸ்கரன்

இ.ஜெகநாதன்

‘சசிகலா கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு; சசிகலா குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும்,’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 133 பயனாளிகளுக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசுகையில், "காங்கிரஸ் எம்ஏல்ஏ ராமசாமி காரைக்குடியை மாநகராட்சியாக்க வலியுறுத்தினார்.

அதையே நாங்களும் முதல்வரிடம் வலியுறுத்துகிறோம். ஒன்றிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா வழங்கியதில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருக்கலாம். ஆனால் தற்போது எந்த முறைகேடும் நடக்கவில்லை,’ என்று கூறினார்.

விழாவிற்கு பிறகு, ‘சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவால் அதிமுகவில் தாக்கம் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் பதிலளிக்கையில், ‘ அவர் கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு, அவர்கள் அவர்களது வேலையைப் பார்க்கின்றனர்.

நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். சசிகலா குறித்து கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ? அது தான் எங்கள் முடிவு" என்று கூறினார்.

SCROLL FOR NEXT