செந்தில் பாலாஜி - ஜோதிமணி: கோப்புப்படம் 
தமிழகம்

செந்தில் பாலாஜி, ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் முடிவை விரைந்து அறிவிக்கக் கோரி அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று (டிச.17) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடிவுகளை விரைந்து வெளியிடக்கோரும் நோக்கில், அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், கிட்டத்தட்ட இந்தப் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதாகவும், ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனங்களும் நகர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வரும் 18-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்த நீதிபதி,
அன்றைய தினம் வழக்கு குறித்து அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தண்டனைக்குத் தகுதியான வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், முகாந்திரமற்ற விஷயங்களில் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் காவல்துறைக்கு நீதிபதி பொதுவான அறிவுறுத்தலை வழங்கினார்.

SCROLL FOR NEXT