வலையில் சிக்கிய டம்மி டார்கெட். 
தமிழகம்

புதுவை மீனவர் வலையில் சிக்கிய முப்படைகளில் பயன்படுத்தப்படும் டம்மி டார்கெட்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி மீனவர் வலையில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் டம்மி டார்கெட் சிக்கியது.

புதுவை சோலை நகரை சேர்ந்த மீனவர் சுதாகர். இவர் இன்று (டிச. 17) கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் வீசிய வலையில் கனமான பொருள் சிக்கியது. இதனை அவர் இழுத்து எடுத்துள்ளார். அதில் கனமான இரும்பு பொருள் இருப்பது தெரியவந்தது.

இதனை அவர் கரைக்குக் கொண்டு வந்தார். இது குறித்து, அவர் மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த பொருள் ராக்கெட்டின் பாகம் போல இருந்ததை கண்ட மீனவர்கள் அச்சத்தில் இது குறித்து, கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பொருள் 15 கிலோ எடையும், 3 மீட்டர் நீளமும் இருந்தது.

கடலோரக்காவல்படை எஸ்.பி. பாலசந்தர் மற்றும் என்சிசி அதிகாரிகள் உடனே அந்த பொருளை பார்வையிட்டனர். அப்போது, முப்படைகளில் டம்மியாக வானில் ஏவி சுட்டு பயிற்சி எடுக்கும் பொருளான டார்கெட் என்பது தெரியவந்ததது.

இதனையடுத்து, இதனால் ஏதாவது ஆபத்தா என ஆய்வு செய்யப்பட்டது. ஆபத்து இல்லை என தெரியவந்ததையடுத்து, இந்திய கடலோர காவல்படையினர் இப்பொருளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT