சிதம்பரத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பைப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய பாஜக அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி சிதம்பரம் காந்தி சிலை அருகில் இன்று (டிச.16) மாலை ஏர் கலப்பைப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு என்.விஸ்வநாதன், சத்தியமூர்த்தி, பரம வெங்கடேசன், ஜெயச்சந்திரன், புவனகிரி வட்டாரத் தலைவர் சேரன், திட்டக்குடி அன்பரசு, இளங்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் பாலதண்டாயுதம் வரவேற்றுப் பேசினார்.
கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருண்ணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் செந்தில்நாதன், மேலிடப் பார்வையாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
வட்டாரத் தலைவர்கள் ஜெயசீலன், ரவிச்சந்திரன், செழியன், பழனிவேல், வைத்தியநாதசாமி, மனோகரன், நஜிர் அகமது, விநோபா, கட்டாரி சந்திரசேகர், சந்துரு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசைக் கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.