சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

அரசுக் கட்டணம் வசூலிக்க வலியுறுத்தல்; சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

க.ரமேஷ்

அரசுக் கட்டணத்தை வசூலிக்கக் கோரி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்இன்று எட்டாம் நாளாக வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியைத் தமிழக அரசு ஏற்ற பிறகு மாணவர்களிடம் அரசுக் கல்லூரிக்குரிய கட்டணத்தை வசூலிக்காமல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினம்தினம் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பல்வேறு விதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்கள் இன்று (டிச.16) எட்டாம் நாளாக வாயில் கருப்புத் துணி கட்டி முழக்கமிடாமல் அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை அமைதியான வழியில் தெரிவித்தனர். கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மருத்துவ மாணவர்கள் கூறுகையில், "நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக நூதனமாக கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்கள் போராட்டத்தை இதுவரை அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, விரைந்து அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்று எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல், தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்போம்" என்றனர்.

SCROLL FOR NEXT