அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சுரப்பா நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், துணைவேந்தர் பதவியில் சுரப்பா நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளின்படி, ஒருவரை 2 தடவைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது. சுரப்பா ஏற்கெனவே கடந்த 2009 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஐஐடியில் தொடர்ந்து இயக்குநராக பதவி வகித்துள்ளார். கடந்த 2016-17 ஆண்டில் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் டீனாகவும் பதவி வகித்துள்ளார்.
ஐஐடி இயக்குநர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு நிகரானது. அந்த அடிப்படையில், அவர் ஏற்கெனவே 2 முறை துணைவேந்தருக்கு நிகரான பதவிகளை வகித்துள்ளார் என்பதால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் அவர் நீடிக்க தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஐஐடி இயக்குநர், இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் ஆகிய பதவிகள் துணைவேந்தர் பதவிக்கு நிகரானது என்பதற்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.