பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (டிச. 15) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். அதனைத்தொடர்ந்து, 2 நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும், நாளை லேசானது முதல் மிதமான மழையும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT