தமிழகம்

மணிமுத்தாறு அணையிலிருந்து சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதல் ரீச் பகுதி விவசாயிகள் மனு

அ.அருள்தாசன்

மணிமுத்தாறு அணையிலிருந்து சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல் ரீச் பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிமுத்தாறு முதல் ரீச் பகுதி விவசாயிகள் அளித்த மனு:

இவ்வாண்டு எங்கள் பகுதியில் போதிய மழை இல்லாததால் குளங்கள் எதுவும் நிரம்பவில்லை. 2-வது ரீச் பகுதியில் பச்சையாறு தண்ணீர் வந்து அந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளது.

3 மற்றும் 4-வது ரீச் பகுதிக்கு தற்போது தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. எனவே 1-வது ரீச் பகுதிக்கு மணிமுத்தாறு அணை தண்ணீரைதவிர வேறு நீர் ஆதாரம் கிடையாது.

மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டைப்போல் தற்போது நீர்மட்டம் 105 அடிக்கு மேலுள்ளதால் 4 பகுதிகளுக்கும் தண்ணீர் போதுமானதாக உள்ளது.

எனவே சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடி தண்ணீருக்காக 80 அடி வாய்க்கால் முதல்ரீச் பகுதிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி மாணவ மாணவிகள் அளித்த மனு:

தொடக்க கல்வி ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு அரசின் வழிகாட்டுதல்கள் படி கடந்த 21.9.2020 முதல் 7.10.2020 வரை தமிழகத்தில் நடைபெற்றது. இத் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் 98 சதவிகிதம் மாணவ மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். கரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டம், போக்குவரத்து வசதி முழுமையாக இல்லாத நேரம், விடுதிகள் திறக்க கூடாது என்ற அரசின் உத்தரவு, பல மாவட்டங்களில் ஒரே ஒரு தேர்வு மையம், தொடர்ச்சியாக 14 நாட்கள் தேர்வு என்று பல்வேறு தேர்வு திட்டமிடுதல் குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே அரசு ஒரு விசாரணை குழுவை அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும். விடைத்தாள்களை ஆய்வு செய்து ஆன்லைன் தேர்வோ அல்லது மறுதேர்வோ நடத்தி தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கடந்த ஆண்டிலிருந்து தண்டுவடம் பாதிப்படைந்தவர்களுக்கு சிறப்பு ஸ்கூட்டர் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறப்பு ஸ்கூட்டர்களை தொடர்ந்து வழங்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.1500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

பாளையங்கோட்டை வட்டம் ரஹ்மத்நகரை சேர்ந்த பார்வைகுறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ஆர். இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மனுவில் சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி எஸ். மாரிமுத்து, ஊனமுற்றோர் உதவி தொகை மற்றும் செயற்கை கால் உபகரணங்கள் கேட்டு மனு அளித்தார்.

SCROLL FOR NEXT