தூய்மை பாரதம் இயக்கத்தை வலியுறுத்தும் வகையில், சேலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் வடிவமைத்த பிரதமர் மோடியின் உருவ வெள்ளிச் சிலையை சேலம் வந்திருந்த பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடியிடம் பொற்கொல்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கினர்.
பிரதமர் மோடி தூய்மைப் பணி மேற்கொள்வதுபோல ஒன்றே முக்கால் இன்ச் உயரத்தில் 48 கிராம் வெள்ளியில் சிறிய சிலையை சேலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் சங்கர் என்பவர் வடிவமைத்திருந்தார். இந்த சிற்பத்தை பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளில், அவருக்கு நினைவு பரிசாக வழங்க சங்கர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக பிரதமரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் வந்த பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ்மோடியிடம், பிரதமர் மோடியின் உருவ வெள்ளிச் சிலையை சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட பிரதமரின் சகோதரர், சிற்பத்தை பிரதமரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது பாஜக பிரமுகர்கள் கோபிநாத், சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.