தேனி பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துப் பணிமனை அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி உள்ளது.
கேரளா செல்லும் வாடகை வாகனங்கள் மாநில நுழைவு அனுமதிச்சீட்டை இங்கு பெற்று தொடர்ந்து பயணிப்பது வழக்கம். சபரிமலை சீசன் தொடங்கியதால் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் இங்கு அதிகளவில் வந்து செல்கின்றன.
இந்நிலையில் இங்கு அனுமதிச்சீட்டு வழங்க லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட போலீஸார் இன்று காலை 6 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் அப்போது பணியில் இருந்தார்.
அனுமதி பெறுவதற்காக வழங்கப்பட்ட ஆவணங்கள், அதற்கான பணம் உள்ளிட்டவை குறித்து சோதனை செய்யப்பட்டது.
அப்போது கணக்கில் வராமல் ரூ.5ஆயிரத்து 500 இருப்பது தெரிந்தது.
அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். இப்பண வரவிற்கான உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படுமென்று போலீஸார் தெரிவித்தனர்.