அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம்கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்காக கூடுதல் இடங்களை ஒதுக்க முடியுமா என்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் பலமாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இதுபோன்ற மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதாக முதல்நாள் கலந்தாய்வு நடந்து முடிந்தபிறகு தமிழக அரசு அறிவித்ததால் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் தங்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்என்ற முதல்வரின் அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டுமென வாதிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்தபிறகு கிடைத்த 160 இடங்களில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 பேரில் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, 7.5% இடஒதுக்கீட்டின்படி கலந்தாய்வில் பங்கேற்று கட்டணம் செலுத்த முடியாமல் போனதால் சேர்க்கை கிடைக்காமல் உள்ள எஞ்சிய மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் விதமாக 24 மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக இடம் ஒதுக்க முடியுமாஎன்பது குறித்து தேசிய மருத்துவஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.17-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்