மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

பசிப் பிணி போக்கிய மாமனிதர்: சுப்பிரமணியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

குறைந்த விலையில் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லாப நோக்கம் இன்றிக் கடந்த பல வருடங்களாக மலிவு விலையில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை, மருந்துகள், உணவுகளை அளித்து வந்த கோவை சாந்தி கியர்ஸ் அண்ட் சோஷியல் சர்வீஸ் நிறுவன அறங்காவலரும் சமூகச் செயற்பாட்டாளருமான சுப்பிரமணியன் (78) உடல்நலக் குறைவால் இன்று (டிச.11) காலமானார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி:

"உழைப்பால் உயர்வு பெற்று, மனிதநேயத்துடன் பிறர் துயர் துடைத்த நல் இதயமும் கொண்ட மாமனிதர் கோவை சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கேற்ப எவ்வித விளம்பரமும் தேடாமல் மிகக் குறைந்த விலையில் உணவளித்து, பசிப் பிணி போக்கியவர்.

பலருக்கும் உதவிகள் செய்து வாழ்வில் ஒளியேற்றிய சுப்பிரமணியன் உலகை விட்டு மறைந்தாலும் நம் உள்ளத்தில் நிலைத்திருப்பார்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT