இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற சுமார் 9 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 4.50 கோடி மதிப்பிலான தங்கத்தைக் கைப்பற்றி ஐந்து இளைஞர்களை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.
மேலும் இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுகள் மற்றும் ராமேசுவரம் தீவு, மணல் தீடைகள் உள்ளன.
இங்கிருந்து, கடல் மார்க்கமாக இலங்கை செல்ல மிகக்குறைவான தூரமே உள்ளது. இதனால், இலங்கையில் இருந்து தங்கமும், தமிழகத்திலிருந்து கஞ்சா, போதைப் பொருட்களும் கடத்தப்படுவதால் எல்லைப் பகுதிகளில் கடற்படை, கடலோர காவற்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து மண்டபம் அருகே தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுதுறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மண்டபத்திலிருந்து கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்துப் படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனர்.
மண்டபம் அருகே நடுக்கடலில் ஒரு நாட்டுப் படகினை சோதனை செய்தபோது 9 கிலோ தங்கம் இருந்தது. உடனே படகிலிருந்த 5 மீனவர்களை கைது செய்து கரைக்கு கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்ததும் கைது செய்யப்பட்ட 5 பேரும் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்த முகம்மது ராசிக் (33), ஜைனுல் பயாஸ்கான் (28) பைஸ் அஹமது (28), ஜாசிம் அஹமது (23), முகம்மது பாரூக் (25) என்பது தெரியவந்தது.
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் தங்கக் கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீனவர்களிடம் அதிக பண ஆசையினைத் தூண்டி அவர்களை இந்தக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதுக் குறிப்பிடத்தக்கது.