கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம், பாரூர் ஏரியிலிருந்து வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 11) வெளியிட்ட அறிக்கை:
"கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில், 14.12.2020 முதல் 12.4.2021 வரை மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அதேபோன்று, முதல்வர் இன்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் இரு பிரதானக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 14.12.2020 முதல் 12.4.2021 வரை மொத்தம் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.