அதிமுக கவுன்சிலர்கள் 
தமிழகம்

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி. சமபலம் தொடர்ந்ததால் குலுக்கல் முறையில் தேர்வு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. சமபலம் தொடர்ந்ததால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதிமுகவின் கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் உள்ளன.

இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து கரோனாவால் மேலும் 6 மாதங்களாக தேர்தல் தள்ளிபோனது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து டிச.4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பொன்மணி பாஸ்கரன் (அதிமுக கவுன்சிலர்)

இந்நிலையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டிச.4-ம் தேதி பகல் 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி சிவகங்கை வந்தார். ஒரே நாளில் முதல்வர் வருகை, மாவட்ட ஊராட்சித் தேர்தலால் அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.

மேலும் தேர்தல் அன்று முதல்வர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறாக 4 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஒருவழியாக இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவில் இருவருக்கும் சமபலம் கிடைத்ததால் ஆட்சியர் அறிவிப்பின்படி குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் வெற்றி பெற்றார்.

ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் பிற்பகலில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT