மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
1948-ம் ஆண்டில் உலக நாடுகள் ஒன்றிணைந்து கொண்டுவந்த மனித உரிமைப் பிரகடனத்தை ஐநா சபை ஏற்றுக்கொண்ட தினம் டிச.10. இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மனித உரிமை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டின் மனித உரிமை தின கருப்பொருளாக 'சிறப்பாக மீண்டெழுவோம், மனித உரிமைகளுக்காகத் துணை நிற்போம்' என்பதை ஐநா சபை அறிவித்துள்ளது.
மனித உரிமை தினத்தை முன்னிட்டு, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10), தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியா முழுவதும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்!
கரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்!
மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோய்க் கொண்டிருக்கின்றன!
மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம்!
மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.