வரும் டிச.14 அன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற டிசம்பர் 14, திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த நவம்பர் 20-ம் தேதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனையின்படி, தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த அனைத்து விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தெரிவித்துள்ளனர்.