தமிழகம்

வேலை நிறுத்தப் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை; எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி கடைகளை மூட வைத்துள்ளன: பாஜக தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு

கி.மகாராஜன்

தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி கடைகளை மூடச் செய்துள்ளனர் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

மதுரையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக சார்பில் மோடி விவசாய நண்பன் என்ற இயக்கம் விரைவில் தொடங்கப்படும். இந்த இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி செய்த நன்மைகளை கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளுக்கு விளக்குவோம்.

புதிய விவசாய சீர்த்திருத்தச் சட்டங்கள் அவசியமானது என பலர் தெரிவித்துள்ளனர். புதிய சட்டத்தால் விலை பொருட்களே விவசாயிகளே நிர்ணயம் செய்து விற்பனை செயய முடியும்.

விவசாயிகள் நினைத்தால் விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் சட்டங்களை விவசாயிகளுக்கு எதிரான என காங்கிரஸ், திமுக பிரச்சாரம் செய்து வருகிறது.

2016 தேர்தலின் போது விவசாயிகளுக்கு நன்மை தரும் சட்டங்களை நிறைவேற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

தமிழக விவசாயிகள் விவசாய சட்டத்தை ஆதரிக்கின்றனர். தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு இல்லை. எதிர்கட்சிகள் பயத்தை ஏற்படுத்தி கடைகளை மூட வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வேல் யாத்திரை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாஜக எங்கு இருக்கிறது எனக் கேட்டனர். இப்போது அந்த மாவட்டங்களில் வேல்யாத்திரைக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அவர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT