தமிழகம்

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட மறுக்கும் முருகன்

செய்திப்பிரிவு

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், சிறை விதிகளை மீறி ‘குரூப் சாட்டிங்’ முறையில் வீடியோ அழைப்பில் பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முருகன் தனது மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேச தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து முருகன் நேற்றுடன் 15-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், முருகனுக்கு நேற்று முன்தினம் இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

மேலும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், ரத்து செய்யப்பட்ட சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

SCROLL FOR NEXT