தமிழகம்

காவிரியில் 3 மணல் குவாரிகளில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கி.மகாராஜன்

காவிரி ஆற்றில் புதிதாக அமைக்கப்படும் 3 மணல் குவாரிகளில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கரூரைச் சேர்ந்த தினேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

காவிரி ஆற்றிலுள்ள மணல் குவாரிகளில் மணல் விற்பனை நிலையங்களில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்குவதில்லை. இதனால் ஏழை மாட்டுவண்டி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு மணல் விற்பனை நிலையங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கொண்டுச் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கரூர் காவிரி ஆற்றுப் பகுதியில் 5 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைத்து, அதில் 2 இடங்களில் லாரிகளில் அனுமதி வழங்கவும், 3 இடங்களில் மாட்டுவண்டிகளுக்கு அனுமதி வழங்கவும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் திட்ட வரைவு செயல்படுத்தப்படும் என்றார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT