கடலூர் அருகே கீழ்குமராமங்கலத்தில் நிவர் புயலால் சேதமடைந்துள்ள வாழை வயல். 
தமிழகம்

நிவர் புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு: இன்று கடலூர் வருகை

க.ரமேஷ்

கடலூர் மாவட்ட நிவர் புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழுவினர் இன்று(டிச.7) பிற்பகல் 2 மணிக்கு கடலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 25ம் தேதி நிவர் புயல் தாக்கியது. இந்த புயலால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டது.

தமிழக அரசு எடுத்த கணக்கெடுப்பினப்படி கடலூர் மாவட்டத்தில் புயலால் நெல், கரும்பு ,வாழை, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட 4 ஆயிரத்து 470 ஏக்கர் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதுபோன்று 737 குடிசை வீடுகளும் ,916 பக்கா வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளை பொருத்தவரை மாடு கன்று என 26 , ஆடுகள் 56 பலியாகியுள்ளன. 200 ஏக்கர் தோட்டக்கலைத் துறை சம்பந்தப்பட்ட பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகியது என்று அறிவித்துள்ளது இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இரண்டு குழுவாக உள்ள மத்திய குழுவில் ஒரு குழுவினர் மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஸ்அக்னிஹோத்ரி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இன்று(டிச.7) காலை புதுச்சேரியில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

பின்னர் பிற்பகலில் 2 மணிக்கு கடலூர் வரும் மத்திய குழுவினர் நிவர் புயலால் பாதிக்கப்ட்ட திருச்சோபுரம், பெரியப்பட்டு, பூவாணிக்குப்பம் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட ஆய்வு செய்கின்றனர். அதன் பின்னர் கடலூர் தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் வெள்ள பாதிப்பு புகைப்படங்கள்,வீடியோக்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

பின்னர் வரகால்பட்டு, மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் பாதிப்புகளை பார்வையிட்டு பண்ருட்டி வழியாக விழுப்புரம் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT