தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்காடு ஏரியில் படகு சவாரிக்கு அனுமதி இல்லாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்காடு ஏரியில் படகு சவாரி கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. எனினும், ஏற்காட்டில் பயணிகளை கவரக்கூடிய, தோட்டக்கலைத் துறை பூங்காக்கள் அனைத்தும் கடந்த மாதம் திறக்கப்பட்டன. ஆனால், சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ள படகு சவாரிக்கு அனுமதி வழங்கவில்லை.
தற்போது, டிசம்பர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகளில் சுற்றுலா தலங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், ஏற்காட்டில் படகு சவாரி தொடங்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுற்றுலா துறை அதிகாரிகள் கூறும்போது, “ஏற்காடு ஏரியில் பயணிகள் படகு சவாரிக்கான அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக உரிய விளக்கம் கோரப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து வழிகாட்டுதல் கிடைத்ததும் படகு சவாரி தொடங்கப்படும்.
ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு படகு சவாரிக்கு இடையூறு ஏற்படாத வகையில் தயார் நிலையில் உள்ளது. மேலும், 4 மோட்டார் படகுகள் உள்ளிட்ட 55 படகுகள் பராமரிக்கப்பட்டுள்ளது” என்றனர்.