ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை மத்திய பிரதேசத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி மும்பை நோக்கி, கடந்த மாதம் அக்.20 ஆம் தேதி சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த மாதம் அக். 21-ம் தேதி சென்று கொண்டிருந்த போது, மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல் ஓட்டுநர்களை தாக்கி செல்போனுடன் லாரியை கடத்திச் சென்றனர்.
இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டிகங்காதர், 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 பேர் கொண்ட தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீஸாரின் விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு செல்போன் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மத்திய பிரதேசம் சென்ற தனிப்படை போலீஸார் ஒரு மாதமாக தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், இக்கொள்ளையில் தொடர்புடைய பரத்தேவாணி (37) என்பவரை டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் இன்று (டிச. 02) கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, தனிப்படை போலீஸார் கூறும்போது, "ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும், செல்போன்களை வங்கதேசத்திற்கு விற்பனை செய்யும் முகவர்களாகும். தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டு, 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றனர்.