தமிழகம்

7.5% உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த 7 மாணவிகளின் கல்விச் செலவு: திமுக ஏற்றது

செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்த 7 அரசுப் பள்ளி மாணவியர்களின் ஐந்து வருட மருத்துவப் படிப்பிற்கான முழுப் பொறுப்பையும் திமுக ஏற்றுள்ளது. அதன் வர்த்தகர் அணி நிர்வாகி அய்யாத்துரைப் பாண்டியன் ஸ்டாலின் முன்னிலையில் இச்செலவை ஏற்றுக்கொண்டார்.

அரசுப் பள்ளியில் பயின்று 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவிகள் 7 பேரின் 5 ஆண்டு கல்விச் செலவை ஏற்பதாக திமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவர் அய்யாதுரைப் பாண்டியன் இச்செலவை ஏற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் முன் அறிவித்தார். அப்போது கல்வி உதவிபெறும் 7 மாணவிகளும் உடனிருந்தனர்.

இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“திமுக தலைவர் ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தி, போராட்டம் நடத்தியதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவப் பட்டப்படிப்பு பயில இடம் கிடைத்தது.

திமுக தலைவர் ஸ்டாலினை இன்று (30.11.2020) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த, மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்த 7 அரசுப் பள்ளி மாணவியர் ஐந்து வருட மருத்துவப் படிப்பிற்கான முழுப் பொறுப்பையும் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை, ஏ.வெங்டேஷ்குமார் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், திமுக வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவருமான எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் ஏற்றுக்கொண்டார்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT