கோப்புப்படம் 
தமிழகம்

மத்திய எரிசக்தி துறை சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம்

எஸ். முஹம்மது ராஃபி

தமிழகத்தில் முதன் முறையாக தனுஷ் கோடி கடலில் மீது காற்றாலைகளை அமைக்க மத்திய எரிசக்தித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய எரிசக்தித் துறை சார்பில் நாட்டின் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் இந்தியா வில் அதிக காற்று வீசும் கடற்கரை உள்ள மாநிலங்களாக தமிழகம், குஜராத் ஆகிய 2 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத் தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல்பகுதியில் மணிக்கு 29 கிலோ மீட்டர் வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.

இதையடுத்து வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதுபோல, கடல் மீது காற்றாலைகளை அமைக்கும் பணி இந்தியாவில் முதன் முறையாக குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியில் மத்திய எரிசக்தி துறை சார்பாக கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனிடையே, ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் உயர் கோபுரம் அமைத்து அதில் அதி நவீன கருவி பொருத்தப்பட்டு காற்றின் வேகம் குறித்த ஆய்வுப் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இதில் தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் முதன் முறையாக தனுஷ்கோடி கடலில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 4 முதல் 5 காற்றாலைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

கடலோர ஒழுங்குமுறை அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் தமிழகத்தில் முதன் முறையாக ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் கடல் மீது காற்றாலைகளை அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT