தமிழகம்

நாம சங்கீர்த்தனம் மூலம் ஆன்மிக சேவை புரிந்த கோவை ஜெயராமன் பாகவதர் மறைவு

செய்திப்பிரிவு

கடந்த 50 ஆண்டு காலமாக, நாம சங்கீர்த்தனம் மூலம் ஆன்மிக சேவையாற்றி வந்த கோவை ஜெயராமன் பாகவதர் (68), கடந்த நவ 23-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் 1951-ம் ஆண்டு சுந்தரமய்யர் பாகவதர் - கர்னாடக இசைப்பாடகி பிரகதாம்மாள் தம்பதிக்குமகனாகப் பிறந்தவர் ஜெயராமன்.

தனது 6-வது வயதில் இருந்துநாதஸ்வர வித்வான் கோவிந்தராஜ பிள்ளையிடம் இசை பயின்றார். பின்னர் பி.எம்.சுந்தரம் என்பவரிடம் இசை, நாம சங்கீர்த்தனம் பயின்றார். ஆலங்குடி ராதா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி வந்தார்.

ஐயப்பன், சத்ய சாய்பாபா, ஞானானந்த சுவாமிகள்உள்ளிட்டவர்கள் மீது ஏராளமான பாடல்கள் எழுதியும் பாடியும் வந்துள்ளார்.
பிரம்மபுதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் பத்ததியில் பல ஆண்டுகளாக நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த இவர், சில நாட்கள் முன்பு, உடல்நலக் குறைவு காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த நவ. 23-ம்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

அன்றைய தினம் நுங்கம்பாக்கத்தில் அவரது உருவப்படத்தை திறந்து வைத்து அனைத்து பாகவதர்களும் இணைந்து சிரத்தாஞ்சலி நடத்தினர். மறைந்த கோவை ஜெயராமபாகவதருக்கு அகிலா என்ற மனைவியும் மூன்று மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

SCROLL FOR NEXT