தமிழகம்

கிரானைட் முறைகேடு வழக்கு: சகாயம் அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் 5 வாரம் அவகாசம்

செய்திப்பிரிவு

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 5 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற முதல் அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்ட ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது.

கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அவர், நீதிமன்றத்தில் அவ்வப்போது அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியிருந்தார் சகாயம்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், "கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நவம்பர் 23-ம் தேதி வரை 5 வாரம் அவகாசம் அளிக்கிறது.

5 வாரங்களுக்கு முன்னதாகவே விசாரணை அறிக்கை தயாரானாலும் தாக்கல் செய்யலாம். ஆனால், இதற்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது" எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT