சிதம்பரம் அருகே உள்ள புஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தன்னார்வலர்களுடன் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீஸார். 
தமிழகம்

புயல் முன்னெச்சரிக்கை: பாதுகாப்புக்காக கடலூர் மாவட்டக் கடற்கரை கிராமங்களில் போலீஸார் ரோந்துப் பணி

க.ரமேஷ்

கடலூர் மாவட்டக் கடற்கரையோர கிராமங்களில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்புக்காக போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் மேற்பார்வையில் கடலூர் எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவின்படி இன்று (நவ.25) புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய 44 கடற்கரைக் கிராமங்களில் 2 துணை ஆய்வாளர்கள் மற்றும் 7 போலீஸார் கொண்ட குழுவினர் வாக்கிடாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக எடுத்து வந்துவிட்டார்களா என்பதைக் கண்காணிப்பதுடன், மக்கள் வீடு மற்றும் பாதுகாப்பு மையங்களில் பத்திரமாக உள்ளார்களா என்பதையும் கவனித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .

மேலும், கடலூர் மாவட்டத்தில் 42 புயல் பாதுகாப்பு மையங்களிலும் ஒரு துணை ஆய்வாளர், 6 போலீஸார் வாக்கிடாக்கியுடன் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு மையங்களில் எவ்வளவு நபர்கள் தங்கியுள்ளனர், அவர்களுக்கு உணவு மற்றும் இதர அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT