பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் 37 ஆயிரத்தை நெருங்கும் கரோனா தொற்று; புதிதாக 51 பேர் பாதிப்பு: உயிரிழப்பு இல்லை

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு இல்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 25) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் இன்று 3,259 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-27, காரைக்கால்-6, ஏனாம் - 4, மாஹே-14 என மொத்தம் 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக குறைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் இதுவரை 36 ஆயிரத்து 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 230 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடுகளில் 315 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 545 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 45 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 666 ஆக (96.87 சதவீதம்) அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 91 ஆயிரத்து 854 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 50 ஆயிரத்து 749 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT