திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் சன்னதியில் வழிபாடு செய்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 
தமிழகம்

திமுகவில் வேறு தலைவர்கள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாததால் மகனைப் பிரச்சாரத்துக்கு அனுப்பியுள்ளார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

வீ.தமிழன்பன்

திமுகவில் வேறு தலைவர்கள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாததால், மகனைப் பிரச்சாரத்துக்கு அனுப்பியுள்ளார் எனத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு இன்று (நவ.23) காலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். சனி பகவான் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

''குறை சொல்லிக்கொண்டே இருப்பது திமுகவின் வழக்கம். திமுக பலவீனமாக இருக்கிறது, சிக்கல் இருக்கிறது என்பதால்தான் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டிருக்கிறார். திமுகவில் தொண்டர் பலம் கிடையாது. ஓடி உழைக்கக் கூடிய இளைஞர்கள் கூட்டம் கிடையாது. உழைக்கக்கூடிய, மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய இளைஞர்கள் அதிமுகவில்தான் நிரம்பி உள்ளனர். அதிமுக தலைவர்கள் எப்போதும் மக்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கின்றனர்.

தேர்தல் வருவதால் பயத்தின் காரணமாக திமுகவினர் மக்களைச் சந்திக்கச் செல்கின்றனர். திமுகவில் வேறு தலைவர்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் தனது மகனைப் பிரச்சாரத்துக்கு அனுப்பியுள்ளார். ஸ்டாலினைப் பொறுத்தவரையில், கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், கட்சியின் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர, அவரால் ஆட்சியைப் பிடிப்பதற்கு நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை. மீண்டும் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். அந்த வாய்ப்பை மக்கள் அளிப்பார்கள்.

புதுச்சேரி அதிமுக, தமிழக அதிமுக இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கத் தேவையில்லை. தமிழகத்தில் பிரதிபலிக்கக்கூடிய அரசியில் வியூகங்கள், மாற்றங்கள் புதுச்சேரியிலும் பிரதிபலிக்கும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் நேரத்தில், புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். பாஜக-அதிமுக கூட்டணி குறித்துத் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெளிவாகச் சொல்லிவிட்டனர். எங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதைத் தேர்தல் சமயத்தில் முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுத்து அறிவிப்பார்கள்''.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

பேட்டியின்போது அதிமுக காரைக்கால் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT