தமிழகம்

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 2026-ல் முடியும்; தினமும் 25 லட்சம் பேர் பயணம் செய்யலாம்

செய்திப்பிரிவு

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வரும் 2026-ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் 25 லட்சம் பேர் பயணம் செய்ய முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2-வது கட்டமாக ரூ.61,843 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, வில்லிவாக்கம் பகுதியில் நேற்று முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் சிறப்புகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கி.மீ நீளத்தில் 3 வழித்தடங்களுடன் ரூ.61,843 கோடி செலவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன்படி, மாதவரம் - சிப்காட் வரை 48. கி.மீ நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்தில் அமையவுள்ள தடத்தில் 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 30 மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையில் 47 கி.மீ நீளத்தில் அமைக்கவுள்ள தடத்தில் 42 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 48 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே ஒரே முறையில் செயல்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட பெரிய ரயில் திட்டமாகும் இது. 2026-ல் இந்த 3 வழித்தடங்களும் முடிந்த பின்னர், சென்னையில் 173 கி.மீ நீளத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தினமும் 25 லட்சம் பேர் பயணம் செய்ய முடியும்.

இது பொதுபோக்குவரத்து பயணங்களில் 25 சதவீதம் அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், முதலீடுகள் மற்றும் பொருளாதார செயல்பாடுகளுக்கு உகந்த உலகத்தரம் வாய்ந்த நகரமாக சென்னை அமையும். புறநகர் ரயில் மற்றும் துரித போக்குவரத்து அமைப்பு, நகர பேருந்து சேவை ஆகியவற்றுடன் 21 வெவ்வேறு இடங்களில் சிரமம் இன்றி எளிதாக மாறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவது என்ற அரசின் முக்கிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT