திமுகவின் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லால்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், பெண்களையும் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசி சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்ததாக, திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடியில் இன்று (நவ. 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமார் தலைமை வகித்து பேசும்போது, "அதிமுகவினர் பெண்களை மதிக்கக்கூடியவர்கள். அதிமுகவில் உள்ள அமைச்சர் தொடங்கி நிர்வாகிகள் வரை யாராவது பெண்களை இழிவுபடுத்துவதுபோல நடந்து கொண்டால், அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கட்சியை விட்டே நீக்குவார்கள்.
ஆனால், திமுகவில் அப்படியா நடைபெறுகிறது? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காடுவெட்டி தியாகராஜனை இந்நேரம் நீக்கியிருக்க வேண்டும். ஆனால், வலுவில்லாத தலைவர் என்பதால் அவர் நீக்கமாட்டார். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டாலும்கூட கவலைப்பட வேண்டாம். வரக்கூடிய தேர்தலின்போது இங்குள்ள 9 தொகுதிகளிலும் திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.